*வாய்வுக்குத் தீர்வு என்ன?*
*வாய்வுக்குத் தீர்வு என்ன?*
அடிக்கடி மக்களை பாதிக்கும் வயிற்றுப்பிரச்னைகளைப் பட்டியலில் `வாய்வுத் தொல்லை’க்கு முக்கிய இடமுண்டு. மனித உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப்பை, உணவுப்பாதை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாய்வு இருக்க முடியும். நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல் தலை முதல் பாதம் வரை வாயு சுற்றிக் கொண்டு இருப்பதில்லை. அப்படிச் சுற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக அமையும்.
*எப்படி உணவுப்பாதைக்குக் காற்று வருகிறது?*
பொதுவாகவே நாம் ஒவ்வொருவரும் உணவை உண்ணும் போது உணவுடன் சிறிதளவு காற்றையும் வயிற்றுக்குள் விழுங்கி விடுகிறோம். அதிலும் குறிப்பாக, அவசர அவசரமாக உண்ணும் போது, பேசிக்கொண்டே உண்ணும்போது, காபி, தேநீர் மற்றும் காற்றடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, மது அருந்தும்போது, சூயிங்கம் மெல்லும் போது, புகைபிடிக்கும் போது, சுருட்டு பிடிக்கும் போது, வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா போடும் போது, அடிக்கடி தண்ணீர் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே உணவுடன் காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவிகிதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறி விடும். மீதி குடலுக்குச் சென்று, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. இந்தக் காற்று விழுங்கல் சாதாரணமாக இருந்தால் தொல்லை எதுவும் தருவதில்லை. அளவுக்கு மீறினால்தான் இது ஒரு `வாய்வுப் பிரச்சினை’யாக உருவாகும்.
*எது வாய்வுத் தொல்லை?*
பசிக்குறைவு, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உணவுப்பாதை பிரச்னையை `வாயுத் தொல்லை' (Flatulence) என்கிறது மருத்துவம்.
*வாய்வு எப்படி உருவாகிறது?*
வயிற்றில் வாய்வு உருவாக இன்னொரு வழியும் உள்ளது. அதாவது, குடலில் உணவு செரிமானமாகும் போது, அங்கு இயல்பாகவே உள்ள தோழமை பாக்டீரியாக்கள் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன. அப்போது ஹைட்ரஜன், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த வாயுக்கள் ஆசனவாய் வழியாக சத்தத்துடன் வெளியேறுகின்றன. சாதாரணமாக இந்த வாயுக்களில் துர்நாற்றம் இருப்பதில்லை. மாறாக, குடலில் சில நொதிகள் குறையும்போது புரத உணவு சரியாகச் செரிமானமாகாது. சில நேரங்களில் `அல்வளி பாக்டீரியா’க்களின் (Anaerobic bacteria) ஆதிக்கம் குடலில் அதிகரித்துவிடும். இந்த இரு நிலைமைகளில் அமோனியா, ஹைட்ரஜன் சல்பைடு, மெர்காப்டேன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகும். இவை ஆசனவாய் வழியாக வெளியேறும்போதுதான் துர்நாற்றம் வீசும். மூக்கை மூடிக்கொள்ள வேண்டியது வரும்.
*பிற வழிகள் என்னென்ன?*
√ நம் தினசரி உணவில் பால், பருப்பு, கிழங்கு மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக சேர்க்கும்போது, அடிக்கடி வறுத்த உணவுகளைச் சாப்பிடும்போது, இரைப்பை அழற்சி, இரைப்பைப்புண், குடல்புழுக்கள், பித்தப்பைக் கற்கள், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல்வால் அழற்சி முதலிய நோய்கள் உள்ளபோது வாய்வுத்தொல்லை அதிகமாகும்.
√ அதுபோல் உணவுப்பாதையில் ஏற்படும் காசநோய், கணையநோய், கல்லீரல்நோய், புற்றுநோய், குடலடைப்பு போன்றவற்றால் குடலியக்கம் தடைபட்டு வாய்வு அதிகரிக்கலாம்.
√ சிலருக்கு இரத்த அழுத்த மாத்திரைகள், வலிநிவாரணிகள், பேதி மாத்திரைகள், நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் போது அவற்றின் பக்கவிளைவாக வாய்வுத் தொல்லை எட்டிப் பார்ப்பதுண்டு.
√ மிகத்தவறான உணவுப்பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை, முதுமை, உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறைகளும் வாய்வுத் தொல்லையை வரவேற்பவையே.
*வாய்வுக்குப் பரிசோதனை உண்டா?*
ஒருவருக்கு அடிக்கடி வாய்வுப் பிரச்னை தொல்லை தருமானால், வாய்வுக்குக் காரணம் உணவா, நோயா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு `இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனை’ (Gastro Endoscopy), பேரியம் எக்ஸ்-ரே பரிசோதனை, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra Sound Scan) மலக்குடல் அகநோக்கல் பரிசோதனை (Colonoscopy), மலப்பரிசோதனை, இரத்தப்பரிசோதனை போன்றவை தேவைப்படலாம்.
*வாய்வுத் தொல்லை வராமல் இருக்க என்ன செய்யலாம்?*
வாய்வுத் தொல்லைக்குப் பெரும்பாலும் நம் தவறான உணவுமுறை தான் காரணமாக இருக்க முடியும். நம் அன்றாட உணவு முறைகளில் சிறிது மாற்றம் செய்து கொண்டால் போதும், வாய்வுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.
இப்போது எல்லாமே அவசர யுகமாகிவிட்டது. உணவை அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. அது வாய்வுக்கு ஆகாது. சரியான உணவை, சரியான நேரத்தில் நிதானமாக மென்று சாப்பிடுங்கள். வாய்வுப் பிரச்னை பாதி சரியாகிவிடும்.
√ வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் ஒரேவேளையில் வயிறு நிறைய சாப்பிடுவதை விட, சிறு இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடுவது நல்லது.
√ உணவு சாப்பிட்டதும் போதுமான அளவிற்குத் தண்ணீர் குடியுங்கள்.
√ பேசிக்கொண்டே சாப்பிடாதீர்கள்.
√ இரவு உணவை உறங்கச் செல்லும் இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள்.
√ காற்றடைத்த புட்டிப் பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் உறிஞ்சிக் குடிப்பதைத் தவிருங்கள்.
√ மது அருந்துதல், சூயிங்கம் மெல்லுதல், புகைபிடித்தல், சுருட்டு பிடித்தல், வெற்றிலை, புகையிலை மற்றும் பான்மசாலா பயன்படுத்துதல் போன்ற தீயபழக்கங்களை நிறுத்துங்கள்.
√ பல மணிநேரம் ஒரே இடத்தில் வேலை செய்கின்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் 40 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து வந்தால் வாய்வு குறையும்.
√ துர்நாற்றத்ததுடன் வாய்வு வெளியேறினால் பால், முட்டை, இறைச்சி போன்ற புரத உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
√ மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.
√ அடிக்கடி வாய்வு தொல்லை தருமானால் குடல்புழுவுக்கும் அமீபா கிருமிகளுக்கும் மாத்திரை சாப்பிடலாம்.
*வாய்வு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை?*
மொச்சை, பட்டாணி, சுண்டல், பயறுகள், பருப்பு வகைகள் (பயிறு மற்றும் பருப்பு வகைகளை சூடாக சாப்பிடுப்போது வாயுவாகாது), எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காரம் மற்றும் மசாலா மிகுந்த உணவுகள், எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள், சாக்லெட், கேக், ஐஸ்கிரீம், பிஸ்கெட், கற்கண்டு போன்ற இனிப்புகள், புட்டிகளில் அடைத்த மென்பானங்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் செயற்கைப் பழச்சாறுகள் மற்றும் உணவுகள், பால் அல்வா, பால்கோவா, பாலாடைக் கட்டி போன்ற பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள்.
*முன்னோர் வைத்தியம்*

Comments
Post a Comment