மசாலா டீ

*ஒரு கோப்பை தேநீர் தரும் ஆரோக்கியம் ஏராளம் - 3 - !!!* 
*மசாலா டீ* 

*தேவையானவை* :  தேயிலை, சர்க்கரை – தலா 2 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் –  தலா 2, பால் – அரை கப், பட்டை – சிறிய துண்டு. 

*செய்முறை* : பட்டை, கிராம்பு, ஏலக்காயைச் சேர்த்துப் பொடிக்க வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவிடவும். அதில் தேயிலை மற்றும் செய்துவைத்துள்ள பொடி கால் டீஸ்பூன் சேர்க்கவும். நீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, பால், சர்க்கரை சேர்த்து பருகலாம். 

*பலன்கள்* : வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தும். புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். லேசான தலைவலி மற்றும் உடல்வலிக்கு இதைப் பருக, உடனடி நிவாரணம் கிடைக்கும். 

*மசாலா டீ (இரண்டாம் வகை)* 

*தேவையானவை* :  தேயிலை, வெல்லம் – தலா 2 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் –  தலா 2, இலவங்கப் பட்டை – சிறிய துண்டு, மிளகு 1, டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, சுக்கு – சிறிய துண்டு, பால் – அரை கப். 

*செய்முறை* : கிராம்பு, ஏலக்காய், இலவங்கப் பட்டை, மிளகு, ஜாதிக்காய், சுக்கு போன்றவற்றைப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவிடவும். அதில் தேயிலை மற்றும் பொடித்து வைத்த மசாலா பொடி கால் டீஸ்பூன் சேர்க்கவும்,   தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் இறக்கி வடிகட்டி பால், வெல்லம் போன்றவற்றை வழக்கம் போல் சேர்த்துக் குடிக்கலாம் 

*பலன்கள்* : குளிர்காலங்களில் அடிக்கடி ஜலதோஷத்துக்கு ஆளாகிறவர்கள் மசாலா டீயைக் குடித்து வந்தால் நல்ல பலனைக் காண்பார்கள். தொண்டை கரகரப்புக்கும் இதமானது மசாலா டீ. 

*சோம்பு டீ* 

*தேவையானவை* : சோம்பு – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2, தேன் – ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்). 

*செய்முறை* : சோம்பு, ஏலக்காயைப் பொடிக்க வேண்டும். இரண்டு டம்ளர் நீரில் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு டம்ளராக வற்றியதும் வடிகட்டி தேவை எனில், தேன் சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : வைட்டமின்கள் ஏ, பி காம்ப்ளெக்ஸ், செலீனியம், துத்தநாகம், தாமிரம், கால்சியம் நிறைந்துள்ளன. மூட்டுவலியைக் குணமாக்கும். வயிற்றுவலியைப் போக்கும். தாய்ப்பாலைப் பெருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். நரம்பு மண்டலப் பிரச்னைகள் தீரும். 

*பட்டை டீ* 

*தேவையானவை* :  கிரீன் டீ – 2 டீஸ்பூன், பட்டைப்பொடி – கால் டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : கொதிக்கும் நீரில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின், வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும். விருப்பப்பட்டால், பால் சேர்க்கலாம். 

*பலன்கள்* : மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. தேவையற்ற கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். புற்றுநோய் செல்களை அழிக்கும். இதய நோய்கள் வராமல் காக்கும். 

*ஏலக்காய் டீ* 

தேவையானவை : கிரீன் டீ, நாட்டுச்சர்க்கரை – தலா 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பால் – ஒரு கப். 

*செய்முறை* : ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். அதில், தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். டிகாக்‌ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : பொட்டாசியம், கால்சியம், நியாசின், வைட்டமின் சி நிறைந்துள்ளன. உட்புறப் புண்களைக் குணமாக்கும். ஜீரணத்தை மேம்படுத்தும். சளி, இருமல் கட்டுப்படும். சிறுநீர் நன்கு பிரியும். இரத்தத்தைச் சுத்திகரிக்கும். 

*கொய்யா இலை டீ* 

கொய்யாவின் தளிர்களை (இளம் இலைகள்) தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து பருகுவதற்குப் பெயர்தான் Guava Leaf Tea. 

*பலன்கள்* : இரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும், வாய்ப்புண், வயிற்றுவலியை குணப்படுத்தவும் இந்த தேநீரை அடிக்கடி பருகலாம். 

*ஆரஞ்சுத் தோல் டீ* 

*தேவையானவை* : ஆரஞ்சுத் தோல் பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 2, தேன் – 2 டீஸ்பூன். 

*செய்முறை* : ஆரஞ்சுத் தோலின் வெள்ளைப் பகுதியை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்க வேண்டும். இரண்டு டம்ளர் நீரில் அதைப் போட்டுக் கொதிக்கவிட்டு, தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும். பாதியாகச் சுண்டியதும் எடுத்து, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்ட்ஸ் நிறைந்துள்ளன. சருமப் பிரச்னைகள் நீங்கும். சருமம் பளபளப்பு பெறும். முதுமையைத் தாமதப்படுத்தும். புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். 

*ஆவாரம் பூ டீ* 

*தேவையானவை* : ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர், விதை ஐந்தும் சேர்த்துச் செய்த பொடி – 2 டீஸ்பூன் அல்லது காய்ந்த ஆவாரம் பூ – 10 – 15, ஏலக்காய் – 2, பட்டை – சிறிய துண்டு, தேன் –  ஒரு டீஸ்பூன், பால் – கால் கப். 

*செய்முறை* : இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூ பொடி, பட்டை, பொடித்த ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன், பால் சேர்த்துப் பருகவும். 

*பலன்கள்* : ஆவாரம்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் இன்சுலின் பூஸ்டர்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சிறுநீரக மண்டலத்தைச் சுத்தமாக்கும். செரிமானத்தை சீராக்கும். மலச்சிக்கல் தீரும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். 

*ஆவாரம்பூ டீ (எளிய முறை)* 

காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி எலுமிச்சம்சாறு கலந்து அருந்துவதுதான் ஆவாரம் பூ டீ. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆவாரம் பூ தேநீரை சருமம் மினுமினுப்படைய விரும்புகிறவர்களும் பயன்படுத்தலாம். 

*ரோஸ்மேரி டீ* 

*தேவையானவை* : கிரீன் டீ – ஒரு டீஸ்பூன், ரோஸ்மேரித் தூள் – அரை டீஸ்பூன், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன். 

*செய்முறை* : ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் கிரீன் டீ, ரோஸ்மேரித் தூள் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். கொதித்து சாறு இறங்கியதும் வடிகட்டி, தேன் சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : வைட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். இரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். நினைவாற்றலை மேம்படுத்தும். தசைவலி, தசைப்பிடிப்பு நீங்கும். சருமப் பிரச்னைகளில் இருந்து காக்கும். 

*ஓம டீ* 

*தேவையானவை* : கிரீன் டீ – ஒரு டீஸ்பூன், ஓமம் – கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு –  ஒரு டீஸ்பூன். 

*செய்முறை* : கிரீன் டீயுடன் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். சாறு இறங்கியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம். 

*பலன்கள்* : வைட்டமின்கள், ஏ, கே, இ, சி, ஃபோலிக் அமிலம், செலீனியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ஃபோலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. செரிமானத்தை மேம்படுத்தும். நுரையீரல் அழற்சியைப் போக்கும். சளி, இருமலைத் தடுக்கும். தொண்டைப் புண்ணைக் குணமாக்கும்.

Comments

Popular Posts